Monday, May 9, 2011

வெங்காய குழம்பு

கொஞ்சம் கார சாரமா சாப்பிடுற ஆளா நீங்க? அப்போ கண்டிப்பா உங்களுக்கு இந்த ரெசிபி பிடிக்கும்.


 தேவையான பொருட்கள்:
  1. நல்லெண்ணெய் - 6 ஸ்பூன் (நல்லெண்ணெய் உடம்புக்கு நல்லதுதான். பயபடாம நெறைய சேர்த்துகோங்க)
  2. கடுகு, உளுந்து, கருவேப்பில்லை - கொஞ்சம்
  3. வெந்தயம் - கால் ஸ்பூன் (optional)
  4. பெரிய வெங்காயம் - 2  பொடியாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது
  6. மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  7. புளி - நெல்லிக்காய் அளவு (புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளுங்கள்)
  8. உப்பு
செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள்.
  • வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  • உப்பு, மஞ்சள் தூள், புளி கரைசல் + அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.
  • தண்ணீர் வற்றியதும் சூடாக பரிமாறுங்கள்.
சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு நல்ல காம்பினேசன்.

ஒரு டவுட்:  இந்த குழம்பை ரசம் மாதிரி தண்ணியா வெச்சு, வெண்பொங்கலுக்கு சைடு டிஷ்-ஆ யாராவது சாப்பிட்டு இருக்கீங்களா? எப்படி இருக்கும்? சமீபத்தில், டிவியில் ஒரு பிரபல சமையல் நிபுணர் இந்த டிப்ஸ் கொடுத்தாங்க.

Thursday, May 5, 2011

புதினா சட்னி & புதினா சப்பாத்தி ரோல்

எப்போ பாத்தாலும் இட்லி - சட்னி, தோசை - சட்னி சாபிட்டு போர் அடிக்குது. ஒரு சேஞ்ச்-க்கு புதினா சட்னி வெச்சு சப்பாத்தி ரோல்  பண்ணலாம்னு ட்ரை செஞ்சேன். என் கணவருக்கும் இந்த காம்பினேசன் பிடித்திருந்தது (நம்மாளுக்கு சப்பாத்தின்னு பேப்பர்ல எழுதி குடுத்தா கூட சாபிட்டுருவாரு......... ஆனாலும் என் கணவர் ரொம்ப நல்லவருங்க.... அவ்வ்வ்வ்)


புதினா சட்னி:
 
புதுசா நான் இத உங்களுக்கு கற்று கொடுக்கணும்னு அவசியம் இல்ல, நிறைய பேர் இந்த ரெசிபி பதிவு செய்து இருகாங்க (அப்பாடா  தப்பிச்சோம்டா  சாமி-ன்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது). ஆனாலும் என் செய்முறையை சுருக்கமா சொல்லலாம்னு நினைக்கிறன் (கொசு தொல்ல தாங்க முடியலப்பா.......)
 
தேவையான பொருட்கள்:
  1. உளுத்தம் பருப்பு - 4  ஸ்பூன்
  2. கடலை பருப்பு - 2  ஸ்பூன்
  3. புதினா ஒரு கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, தண்ணீரில் கழுவி  சுத்தம் செய்து கொள்ளவும்)
  4. பச்சை மிளகாய் - 5
  5. புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
  6. பூண்டு - 4  பல்
  7. இஞ்சி - சிறிய துண்டு
  8. தேங்காய் துருவல் - 1 /4 கப்
  9. உப்பு
  10. எண்ணெய் - 2  ஸ்பூன்
  11. சீனி -அரை ஸ்பூன்
 செய்முறை:
  • கடாயில் 2  ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் பொன்னிறமாக  வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  • அதே கடாயில் உப்பு, சீனி, தேங்காய் துருவலை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  • வதக்கிய புதினா ஆறியதும், தேங்காய் துருவல், உப்பு, வருத்த பருப்புகள் சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள்.
  • கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த சட்னி-யை அரை ஸ்பூன் சீனி சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். சீனி சேர்ப்பதால் சட்னி நிறம் மாறாமல் இருக்கும், அரைத்த பின் வதக்குவதால் 3 -4  நாள் பிரிட்ஜில் ஸ்டாக் வைத்து கொள்ளலாம் + சப்பாத்தியில் தடவும் போது சப்பாத்தி ரோல் நீர்த்து (ஒரு மாதிரி நீர் கோர்த்து அந்த இடத்தை சுற்றி கொஞ்சம் லூசாக இருக்கும்)  போகாது.


புதினா சப்பாத்தி ரோல்:
 
தேவையான பொருட்கள்:
புதினா சட்னி
பொடியாக நறுக்கிய வெங்காயம்
துருவிய காரட்
லெமன் ஜூஸ்
 
ரோல் செய்ய:
புதினா சட்னியை சப்பாத்தி நடுவில் தடவி, நறுக்கிய வெங்காயம், துருவிய காரட் ஸ்டப் செய்து, அரை ஸ்பூன் லெமன் ஜூஸ் தெளித்து ரோல் செய்யவும். சூடாக பரிமாறவும். 

Tuesday, April 26, 2011

தக்காளி சட்னி


தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பூண்டு (பெரிய பல்) - 4
இஞ்சி - 2 துண்டு (2 பெரிய பல் பூண்டிற்கு சமமாக)
புதினா இலை - ஒரு கை
மல்லி தழை - ஒரு கை
பச்சை மிளகாய் - 2   (அல்லது) வறமிளகாய் - 3 .
கருவேப்பிலை - ஒரு கை
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
உப்பு
தேங்காய் துருவல் (அல்லது) பொடியாக நறுக்கிய தேங்காய் பல் - 1 /4 கப் (தேங்காயை பற்களாக நறுக்கி போடுவதை விட துருவி சேர்த்தால் சட்னி ஒரே சீராக இருக்கும்)
 
செய்முறை:
 
  1. புதினா, மல்லி, கருவேப்பிலை இலைகளை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் உப்பு, தேங்காய் துருவலை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.
  3. 2 நிமிடம் கழித்து உப்பு சேர்த்து வதக்கவும். இப்போது தக்காளி நீர் விட்டு நன்றாக வதங்கும்.
  4. 3 நிமிடம் கழித்து தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வதக்கிய பின் அடுப்பை அணைத்து விடலாம்.  
  5. ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்தெடுங்கள். கம கம தக்காளி சட்னி ரெடி.
 
தோசை, இட்லி, தயிர் சாதம் இவற்றுடன் பரிமாறலாம்.

Wednesday, April 20, 2011

பால் பாயசம் - செய்முறை(1 )

 என்னடா புத்தாண்டு வாழ்த்து மட்டும் சொல்லிட்டு ரெசிபி தராம போய்டாளே-ன்னு பார்தீங்களா. மதுரை சித்திரை திருவிழா-காக புத்தாண்டு அன்று குடும்பத்தோடு கிளம்பி விட்டோம் (என் கணவர் ஊர் மதுரை). மதுரை சித்திரை திருவிழா முதன் முறையா பார்கிறேன், அப்பப்பா கொள்ளை அழகு. திருவிழாவை பற்றி  உங்களோடு பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் புகைப்படத்தோடு சேகரித்து உள்ளேன், விரைவில் அந்த பதிவை எதிர் பாருங்கள்.
திருவிழா முடிந்து அம்மா வீட்டுக்கும் (காரைக்குடி) வந்தாச்சு !! என் குழந்தையை குளிபாட்டுவதில் இருந்து தூங்க வைக்கும் வரை எல்லாத்தையும் அம்மா-விடம் outsource செய்துவிட்டு சந்தோசமாக நாட்களை நகர்த்தி  கொண்டிருகிறேன்.
ஓகே ஓகே சொந்த கதை சோக (சந்தோஷ ryt?? ) கதையை விட்டுட்டு ரெசிபி-க்கு வருவோம்.



அது என்ன செய்முறை(1 )? அப்போ செய்முறை(2 ) வேற இருக்கானு question வந்துருச்சா? வெரி குட். இது சேமியாவில் செய்தது. அரிசியிலும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

பால் - 4 கப்
சேமியா - 2 கப் (வறுத்தது, வறுக்காதது எதுவானாலும் ஓகே)
சீனி - 1 கப்
ஏலக்காய் போடி - ஒரு சிட்டிகை
ஒரு கரண்டி நெய்யில் வருத்த முந்திரி பருப்பு (10 ) + உலர் திராட்சை (6 )

செய்முறை:

  1. பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சுங்கள்.
  2. 3 கப் தண்ணீரை காய வைத்து அதில் சேமியாவை சேர்த்து  கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் தண்ணீரை நன்றாக வடித்து விடவும்.
  3. பால் கொதித்து கொஞ்சம் வற்றியதும் வேக வைத்த சேமியாவை சேருங்கள். சேமியாவை பாலிலும் வேக வைக்கலாம். ஆனால் எதாவது டெக்னிகல் பால்ட் ஆகி பால் திரிஞ்சு போயிடுச்சுனா, அப்புறம் பாலும் கிடையாது! பாயசமும் கிடையாது!
  4. 5 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏல பொடி, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும்.  சூடாக / குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.

என் அம்மா மீன் வறுக்கும் வாசனை மூக்கை துளைக்குது. bye bye! 

Thursday, April 14, 2011

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

உங்கள் வருகைக்கு நன்றி. புத்தாண்டு பலகாரம் எடுத்துகோங்க !

Wednesday, April 13, 2011

பருப்பு உருண்டை குழம்பு


என்னுடைய favorite ரெசிபி. பார்க்கும் போதே சாப்பிடனும்னு தோணுதா......  
 
தேவையான பொருட்கள்:
நலெண்ணெய் - 4  ஸ்பூன்
கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை - கொஞ்சம்
சின்ன வெங்காயம் / பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 கை
பொடியாக நறுக்கிய தக்காளி - 4
புளி கரைசல் - அரை கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மல்லி தூள் , மிளகாய் தூள் - தலா 1  1 /2  ஸ்பூன்
உப்பு
மல்லி தழை - கொஞ்சம்
 
பருப்பு உருண்டை பிடிக்க:
15 நிமிடம் நீரில் ஊற வைத்த கடலை பருப்பு - 3 /4  கப்
பொடியாக அறிந்த வெங்காயம் - 6 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 /2  ஸ்பூன்
உப்பு
 
15 நிமிடம் கழித்து பருப்பு கழுவி நீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீர் விட தேவை இல்லை. மற்ற சாமான்களை பருப்புடன் சேர்த்து பிசைந்து உருண்டை பிடித்து வைத்து கொள்ளவும்.
 
செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்து , வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். வெந்தயம் சேர்பதால் குழம்பு வாசனை வீட்டையே தூக்கும் !!!
  • இப்போ வெங்காயம், தக்காளி சேர்த்து நல்லா வதக்குங்க. அப்புறம் புளி கரைசல், மஞ்சள் தூள், மல்லி + மிளகாய் தூள், உப்பு + 4 கப் தண்ணீர் எல்லாவற்றையும் ஒரே ஷாட்டில் சேர்த்துடுங்க.
  • குழம்பு நல்லா கொதிக்கும் போது உருட்டி வெச்சிருக்கும் பருப்பை ஒன்றன் பின் ஒன்றாக போடுங்க.
  • உருண்டை வெந்ததும் (இதை செக் பண்ண ஒரு உருண்டையை எடுத்து அமுக்கி பாருங்க.அதுக்காக அமுக்கி அமுக்கி எல்லா உருண்டையையும் பிச்சுடாதீங்க!) அடுப்பை அணைத்து விட்டு மல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
டிப்ஸ் டிப்ஸ்: பருப்பை அரைத்த மிக்சி, உங்கள் கை இரண்டையும் கொஞ்சம் தண்ணீரில் கழுவி அந்த தண்ணீரை குழம்பு கொதிக்கும் போது சேர்த்தால் குழம்பு கெட்டியா, வாசனையா இருக்கும்.


Saturday, April 9, 2011

Egg சப்பாத்தி ரோல்

என்றைக்கெல்லாம் எனக்கு சீக்ரம் தூக்கம் வருதோ அன்றைக்கெல்லாம் இது தான் எங்க வீட்டு டின்னர் (இந்த சப்பாத்தி-ய மட்டும் என்  கணவர்-கிட்ட இருந்து பிரிக்க முடியல. இல்லேன்னா தோசை-ய சுட்டு குடுத்துட்டு சீக்கிரம் kitchen-ஐ மூடிவிடலாம்-ன்னு ரொம்ப பீல் பண்ணுவேன்).
ரொம்ப பெரிய வேலையெல்லாம் இல்லீங்க. முட்டை பொரியல் செய்து கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டிங்குடன் பரிமாற வேண்டியது தான்.

தேவையான பொருட்கள்
  1. எண்ணெய் - 4  ஸ்பூன்
  2. கடுகு, உளுந்து, கருவேப்பிலை - கொஞ்சம்
  3. பெரிய வெங்காயம் - 2  - பொடியாக அரிந்தது
  4. பச்சை மிளகாய் - 1
  5. முட்டை - 3
  6. மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
  7. உப்பு
  8. மிளகு தூள் - 2  ஸ்பூன்
செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • முட்டை அனைத்தையும் உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வேகும் வரை வதக்கவும்.
  • கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடலாம்.

ம்ம்ம்ம் இப்போ மெயின் மேட்டர்-ருக்கு வருவோம்.

ரோல் செய்ய:
  • சப்பாத்தி
  • லெமன் ஜூஸ்
  • பொடியாக அரிந்த வெங்காயம்
  
ஒவ்வொரு சப்பாத்தி நடுவிலும் முட்டை பொரியலை பரப்பி, கொஞ்சம் வெங்காயம், அரை மூடி லெமன் ஜூஸ் தெளித்து படத்தில் இருப்பது போல் ரோல் செய்து பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...